புதிய தமிழ்க் கலாசாரத்தில் வேட்டியும் புடைவையும் இரண்டாம் நிலை உடைகளாகி விட்ட போதும் கூட, அவற்றோடு தொடர்புடைய ’வரிஞ்சு கட்டி’ என்ற சொற்றொடரை நாம் இப்போதும் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம், ‘ஏதாவது ஒரு வம்புன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துடுவீங்களே!’
’வரிஞ்சு கட்டுதல்’ என்றால் என்ன அர்த்தம்?
முதலில், அது ‘வரிஞ்சு’ அல்ல, ‘வரிந்து’ என்று சொல்லவேண்டும். ‘ஐந்து’ என்கிற எண் பேச்சுவழக்கில் ‘அஞ்சு’ என்று போலியாக மாறுகிறதல்லவா, கிட்டத்தட்ட அதே ஃபார்முலாவின்படி ‘வரிந்து’ என்பது ‘வரிஞ்சு’ என மாறிவிடுகிறது.
தமிழில் ’வரிதல்’ என்றால், இறுக்கிக் கட்டுதல் என்று அர்த்தம், பொதுவாகப் போர் வீரர்களுடைய உடை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை இது.
போருக்குச் செல்கிறவர்களுடைய ஆடைகள் தொளதொள என்று இருந்தால், கண்ட இடத்தில் மாட்டிக்கொள்ளும், அல்லது, எசகுபிசகான நேரத்தில் அவிழ்ந்துவிடும், அப்போது அவர்கள் மானம் காக்க வேட்டியைப் பிடிப்பார்களா, அல்லது வீரம் காக்க வில்லைப் பிடிப்பார்களா?
இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காகதான், போர் ஆடைகள் இறுகக் கட்டப்பட்டன. அதாவது, போருக்குச் செல்கிறவர்கள் ஆடைகளை வரிந்துகொண்டார்கள். சற்றே நீட்டி முழக்கிச் சொல்வதென்றால், வரிந்து கட்டிக்கொண்டார்கள்.
வேட்டியை வரிந்து கட்டுவதும், கச்சையை இறுக்கி கட்டுவதும் பாரம் சுமத்தல் போன்ற கடும் உடல் உழைப்புகளின் போதும், மல்யுத்தம் போன்ற விளையாட்டு போட்டிகளின் போதும் உடம்பை ‘பேலன்ஸ்’ செய்ய பெரிதும் உதவுகிறது.
உடலின் நடுப்பகுதி நெகிழ்வில்லாமல், சிக்கென உறுதியாக இருக்க, அதை இறுக்க வேண்டியது அவசியம் என்று ‘கோர் எக்ஸ்சர்சைஸ்’ செய்தால் மட்டும் போதாது, தேவையான நேரத்தில் வரிஞ்சுகட்டவும் வேண்டும்.
அதே பதத்தைதான் இன்றைக்கு நாம் பயன்படுத்துகிறோம், ‘வரிஞ்சு கட்டிகிட்டுச் சண்டைக்கு வர்றான்.’
வேட்டியையும் லுங்கியையும் எப்படி வரிந்து கட்டுவது என்று தெரியுமா?
வேட்டியின் இரு முனைகளையும் மடித்து கட்டுவது போல மேலே கொண்டுவந்து அவற்றை இரண்டு கால்களுக்கு இடையே விட்டு பின்பக்கம் கொண்டுவந்து முதுகு புறத்தில் சொருகிக்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட இறுக்கமான கால்சராய்(கால் சட்டை/பெர்முடாஸ்/டவுசர்/பேண்ட்) போல ஆகிவிடும். இதே முறை தான் லுங்கிக்கும்.
வேட்டியையும் லுங்கியையும், ஏன் சாரத்தையும் கூட வரிஞ்சு கட்டலாம். ஆனால் அவற்றை வரிஞ்சு கட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.
வேட்டியையும் லுங்கியையும் மாத்திரம் அல்ல, ஆண்களால் துண்டைக் கூட வரிந்து கட்ட முடியும்.
வேட்டியை, அல்லது லுங்கியை வரிந்து கட்டுவது கிட்டத்தட்ட வட இந்தியர்கள் தோதி(Dhoti) அணிவது போன்றதாகும். ஆனால் தோதி என்பது பேண்ட் போல இருக்கும். வேட்டியை வரிந்து கட்டினால் அதன் உயரம் முழங்கால்கள் வரையே இருக்கும்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான கோணமும் உண்டு.
முன்பெல்லாம் உழவர்கள் தங்களுடைய விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கத்துக்குச் செலுத்திவிடவேண்டும். ஆகவே, அறுவடை நடக்கும்போதே அரசுக்கு உரிய பகுதியை அவர்கள் தனியாக ஒரு சாக்கில் கட்டிக் கொடுத்துவிடுவார்கள்.
இந்த நேரத்தில், சாக்கின் நுனிப்பகுதி நன்றாக இறுகக் கட்டப்படும், அதாவது, வரிந்து கட்டப்படும். இதிலிருந்துதான் ‘வரி கட்டுதல்’ என்ற வார்த்தை வந்ததாகச் சொல்கிறார்கள். பின்னர் அது பல வடிவங்களை எடுத்து இப்போது நமக்கு ‘வருமான வரி’யாக நிற்கிறது.
இப்போதும், ’வரியே கூடாது சார்’ என்று வரிந்து கட்டுகிறவர்கள் உளர்.
Read More: ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?


Comments
Post a Comment